Friday, June 27, 2014

என் அரசிற்கு 100 மணிநேரம் தேனிலவு காலம் கூட கிடைக்கவில்லை - பிரதமர் நரேந்திர மோடி கருத்து

புதுடெல்லி,

பிரதமராக ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் ஒரு மாத காலம் முடிவடையும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று தன்னுடைய வலைப்பூவில் கருத்தை பதிவு செய்துள்ளார்.

அதில் அவர் எழுதியுள்ளதாவது: -

நான் ஆட்சிப் பொறுப்பேற்ற 100 மணிநேரங்களிலேயே பல்வேறு விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் எதிர்கொண்டேன். ஒவ்வொரு புதிய அரசுக்கும் தற்போது மீடியா நண்பர்கள் தேனிலவு காலம் என்று அழைக்கக்கூடிய ஒரு கால வரம்பு உண்டு.

இதற்கு முந்தைய காங்கிரஸ் அரசு தங்கள் வசதிக்கேற்ப அந்த தேனிலவு காலத்தை 100 நாட்களாக நீட்டித்துக் கொண்டனர். ஏன் அதற்கு மேலும் கூட நீட்டித்துக் கொண்டார்கள்.

ஆனால், அவர்களை போல எனக்கு எந்த வசதியான காலமும் கிடைக்கவில்லை. இது ஒன்றும் நான் எதிர்பார்க்காதது அல்ல. ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். 100 நாட்களை விடுங்கள். வெறும் 100 மணி நேரத்திற்குள்ளாகவே குற்றச்சாட்டுகள் எழத்துவங்கி விட்டன. ஆனால், எங்களுக்கு மக்களை திருப்தி செய்யும் வகையில் ஆட்சி செய்வதே முக்கியமான இலக்கு. இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.

10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி குறித்து கருத்து தெரிவித்த மோடி கூறுகையில், டெல்லியில் நான் சந்தித்த மிகப்பெரிய சவால் என்னவென்றால், நாட்டில் மிகப்பெரிய நேர்மறையான மாற்றங்களை கொண்டு வர ஒரு குறிப்பிட்ட மக்களை தேர்வு செய்ததே ஆகும். இவர்கள், அரசுக்கு உள்ளேயும் உள்ளார்கள். வெளியேயும் இருக்கிறார்கள். கடந்த 67 ஆண்டுகள் ஆட்சியை விட எனது ஒரு மாத கால ஆட்சி சிறப்பாக நடைபெற்று உள்ளது.

ஆட்சி நிர்வாகம் குறித்து நான் யாரையும் குறை கூறமாட்டேன். ஆனால், மக்களிடம் சரியான விஷயங்களை, சரியான நேரத்தில் கொண்டு செல்ல தொடர்புகளை இன்னும் வலுப்படுத்த வேண்டியுள்ளது.

இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment